நீ சொற்கள் நிறுத்தி


நீ சொற்கள் நிறுத்தி

பார்வை தொடங்கியதும்

கவிதை களைந்து
நிர்வாணமாகிறது காதல்!

*

இரண்டு முத்தங்கள் கொடுத்து

இனிப்பானதை எடுத்துக்கொள் என்றாய்.

இயலாத செயலென

இரண்டையும் திருப்பிக் கொடுத்தேன்.

*

யாவரிடமும் இயல்பாய்ப் பழகும் உனது சொற்கள்

எனது நுண்விருப்பங்களை அறிந்து கொள்ள

என்னிடம் மட்டும் வேவு பார்க்கின்றன.

எப்பொழுதும் அளந்தே பேசுபவன்

உனது சாமர்த்தியங்களை சாத்தியப்படுத்துவதற்காகவே

அளவின்றி பேசுகிறேன்.

*

உனது பார்வை மலரும்பொழுதெல்லாம்

எனது விழிகளை வண்ணத்துப்பூச்சிகளாய் மாற்றிட

சிறகடித்து தவிக்கும் இமைகள்!

*

தனியே நீ முணுமுணுக்கும்

இனிய பாடல்கள்

இசைத்தட்டில் ஒலிக்கையில்

இனிமை இழப்பதேன்?

0 comments:

Design by Blogger Templates