ஏழாம் அறிவிடம் தப்பினேன், வேலாயுதத்திடம் மாட்டிக் கொண்டேன்.

ஒரு காலத்தில் சினிமா என் டென்ஷனை குறைக்கும் மருந்தாக இருந்தது. என்னை டெண்ஷனாக்குவதில் சாப்பாட்டுக்கும் முக்கிய பங்கிருப்பதால், இது உச்சக்கட்டத்தை அடையும் போது அதை தணிக்க நான் செய்வது இரண்டுதான். ஓன்று, அன்று ஓட்டலுக்கு போய் வயிறு வெடிக்கும் அளவுக்கு திருப்தியாய் சாப்பிடுவது. இரண்டு, நல்ல சினிமா பார்ப்பது.

கடலூரில் நான் மினி லைப்ரரி வைத்திருந்ததால், முக்கியமான வார இதழ்கள் அனைத்தும் வாங்கிவிடுவேன். எனவே விமர்ச்சனம் படித்துவிட்டுதான் பெரும்பாலும் போவேன். இருந்தாலும் சில சமயம் திடீர் முடிவோடும் போவதுண்டு. கடலூரில் அனைத்து தியேட்டரும் பஸ் ஸ்டான்ட் சுற்றியே இருப்பதால், வண்டியில் அப்படியே எல்லா தியேட்டரையும் சுற்றி வருவேன். கூட்டம் அதிகமாக இருந்தால் அது நல்ல படம் என்ற தியரியை நம்பிப் போவேன். அதிலும் ஏமாறுவது உண்டு. சில சமயம் என் சிந்தனையும், ரசனையும் மக்களோடு ஒத்துப் போகாது.

இப்போதெல்லாம் அதிகம் படம் பார்ப்பதில்லை. இந்த முறை தீபாவளி படம் ஏதாவது பார்க்கலாம் என்று நினைத்தேன். ஏழாம் அறிவு பற்றி பல பதிவுகளை படித்ததால் அதை தவிர்த்தேன். இருந்தாலும் விதி வலியதல்லவா! வேலாயுதத்திடம் மாட்டிக் கொண்டேன். படம் சூப்பர் என்று ஏதோ ஒரு பதிவில் தலைப்பை மட்டும் பார்த்து முடிவெடுத்ததால் வந்த வினை.

இன்று சினிமாவில் யதார்த்தத்தை எதிர்பார்ப்பது என்பது அரசியல்வாதிகளிடம் நேர்மையை எதிர்பார்ப்பது போன்றது. அபூர்வமாக இருக்கும். இருந்தாலும் நம்பி ஏமாறுவதுதானே நம் தலையெழுத்து. அதேபோல்தான் வேலாயுதத்திடம் ஏமாந்தேன்.

படத்தின் ஆரம்ப காட்சிகளே உணர்த்திவிட்டது, இது ஒரு அபத்தமான படமாக இருக்கப் போகிறது என்பதை. இருந்தாலும் முதல் சில காட்சிகளிலேயே வெறுப்பின் உச்சத்திற்கு சென்றுவிட்டதால், அதன் பிறகு வந்த காமெடிகள் கொஞ்சம் கலகலப்பை உருவாக்கின. இந்த படத்தின் காமெடியை மட்டும் ரசிக்கலாம்.

இன்று சினிமா என்பது சாதாரண மனிதனின் ஆசையை அல்லது கனவை நனவாக்கி காட்டும் ஒரு பேண்டசிதான். எனவே கொஞ்சம் மிகைபடுத்தல் இருக்க வேண்டியதுதான். ஆனால் அது இப்போது ஜீரணிக்க முடியாத அளவுக்கு போய்கொண்டிருகிறது. இப்போது டைரக்டர்களும் அரசியல்வாதிகளை போல் ஆகிவிட்டார்கள். நாம் என்ன சொன்னாலும் இந்த மக்கள் நம்புகிறார்கள் என்ற நம்பிக்கை அவர்களுக்கு கொஞ்சம் அதிகமாகவே வந்துவிட்டது. எனவே இஷ்டத்துக்கு காதில் பூ சுத்துகிறார்கள்.

இந்தியாவின் மிக மோசமான அரசியல்வாதி கூட இப்படி இருக்க மாட்டார். அப்படி காட்டுகிறார்கள் அரசியல்வாதியை. ஹீரோவையோ கேட்கவே வேண்டாம். நம் நாட்டுக்கு இராணுவமே தேவை இல்லை. நமது நான்கு எல்லைகளையும் காக்க நான்கு ஹீரோக்களே போதும். முக்கியமா உளவுத் துறையே வேணாம். எல்லாம் ஹீரோவுக்கு அத்துபடி. கஷ்டம்டா சாமி.

படத்தில் பாட்டும் ஒட்டவில்லை, காட்சிகளை நேர்படுத்திய விதமும் சரி இல்லை. சினிமா என்பது ஏதோ ஒரு சம்பவம் அல்லது கதை என்ற அளவில் இருந்தால் ரசிக்கலாம். இந்த வகையில் நான் கடைசியாக பார்த்து ரசித்தது குள்ள நரி கூட்டம். ஒரு தனி மனிதனின் காதலை இயல்பாக காட்டியதோடு அதில் சில சமூக விரோதிகளையும் காட்டி அவர்களை மடக்கும் விதம் ரசிக்கும்படியும், சாத்தியமாகவும் இருந்தது.

அல்லது முழு என்டர்டைன்மென்ட் என்ற வகையில் இருந்தாலும் பரவாயில்லை (எந்திரனை போல்). லாஜிக் எல்லாம் பார்க்காமல் அதை ரசித்துவிட்டு வரலாம்.

சமூக அக்கறை என்ற நோக்கில், அதாவது ஹீரோ கடைசியில் மக்களுக்கு நாட்டு நலன் குறித்து உபதேசம் செய்கிறார் என்ற வகையில் படம் எடுத்தால், அதில் காட்சிகளிலும் மற்றும் தீர்வுகளிலும் கொஞ்சமாவது யதார்த்தத்தை காட்ட வேண்டாமா? இதில் அது மருந்துக்கும் கிடையாது.

இந்த படத்தில் ஒரு காமெடி. விஜயின் தங்கை சரண்யா எல்லோருக்கும் சாப்பாடு கொடுப்பார். அது உப்புமா என்று அவர் சொன்ன பிறகுதான் மற்றவர்களுக்கு அது உப்புமா என்று தெரியவரும். அதுவரை அது ஏதோ ஓன்று என்று நினைத்து சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள். அதேபோல் இந்த படத்தின் டைரக்டர் இது காமெடி படம் அல்லது சீரியசான சமூக அக்கறை கொண்ட படம் என்று தெளிவுபடுத்தினால்தான் நம்மால் இது என்ன வகையான படம் என்று ஒரு முடிவுக்கு வர முடியும்.

இது வேறு ஒரு யதார்த்தம்.

சினிமாவில் நாம் யதார்த்தத்தை பார்க்கக் கூடாது. ஆனால் இந்த யதார்த்தம் தவிர்க்க முடியாதது. எல்லோராலும் எப்போதும் சிறந்ததை தரமுடியாது. 5 வெற்றி படத்தை கொடுக்கும் டைரக்டர் இடையில் ஒரு மொக்கை படத்தையும் கொடுப்பார். அதீத தன்னம்பிக்கையோ அல்லது அலட்சியமோ ஏதோ ஓன்று இதற்கு காரணமாக இருக்கும்.அல்லது விளையாட்டு வீரர்களுக்கு சொல்வதைப் போல் அவுட் ஆப் ஃபார்ம் என்றும் சொல்லலாம்.

நீங்கள் எந்த துறையில் இருந்தாலும் இந்த தியரிக்கு அவ்வப்போது பலியாக வேண்டும். நானும் இதுவரை 60 பதிவுகளுக்கும் மேல் எழுதி இருக்கிறேன். அதில் எத்தனை...? ஒவ்வொரு பதிவையும் கவனத்தோடும் அக்கறையோடும்தான் எழுதுகிறோம் . இருந்தாலும் காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு என்பது போல் அதில் உள்ள குறையை நம்மால் உணர முடியாது. சில பதிவுகளை சற்று காலம் கடந்து படித்து பார்த்தால், அதை இன்னும் சற்று மேம்படுத்தி இருக்கலாம் என்று தோன்றும். அப்படி திருத்தியும் இருக்கிறேன்.

டைரக்டர்களுக்கும் அப்படித்தான். அவர்கள் எடுத்த படத்தை அவர்களே போட்டு பார்த்தால் அவர்களுக்கு அது சிறப்பாகத்தான் தோன்றும். அதை நம்பித்தான் நாங்கள் அப்படி எடுத்திருக்கிறோம் இப்படி எடுத்திருக்கிறோம் என்று இவர்கள் பில்டப் கொடுக்கிறார்கள்.

வேலாயுதத்தை விட ஏழாம் அறிவை மக்கள் அதிகம் எதிர் பார்த்திருப்பார்கள். காரணம் கதை மட்டுமில்லை. முருகதாசும் சரி, சூர்யாவும் சரி நாங்கள் மசாலா டைப்பை சேர்ந்தவர்கள் என்று காட்டிக்கொள்ளாமல் இதுவரை யதார்த்தமான படத்தையே கொடுத்தவர்கள். எனவே எதிர்பார்ப்பு கொஞ்சம் அதிகமாக இருந்திருக்கும். அடுத்த முறை கவனமாக இருப்பார்கள் என்று நம்புவோம்.


0 comments:

Design by Blogger Templates